சூல பாணியை சுடர்தரு வடிவனை நீலகண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்தோய் முடியனை ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை வேத கீதனை வெண்தலை ஏந்தியை பாவ நாசனை பரமேச் சுவரனை கீதம் பாடியை கிளர்பொறி அரவனை போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை
சாதி வானவர் தம்பெரு மான்தனை வேத விச்சையை விடையுடை அண்ணலை ஓத வண்ணனை உலகத் தொருவனை நாத னாகிய நன்னெறிப் பொருளினை மாலை தானெரி மயானத் தாடியை வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை வேத வேள்வியை விண்ணவர் தலைவனை ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை ஆயிர நூற்றுக் கறி வரியானை பேயுருவு தந்த பிறையணி சடையனை
மாசறு சோதியை மலைமகள் கொழுநனை கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச் சீரிய அடியாற் செற்றருள் சிவனை பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை பீடுடை யாற்றை பிராணி தலைவனை
நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை ஈசனை இறைவனை ஈறில் பெருமையை நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை தாதணி மலரனை தருமனை பிரமனை காதணி குழையனை களிற்றின் உரியனை சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை வித்தக விதியனை தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை பிரமன் பெருந்தலை நிறைவ தாகக் கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை
ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை வேதமும் நீயே வேள்வியும் நீயே
நீதியும் நீயே நிமலன் நீயே புண்ணியம் நீயே புனிதன் நீயே பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே ஊழியும் நீயே உலகமும் நீயே வாழியும் நீயே வரதனும் நீயே
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே மூவரும் நீயே முன்னெறி நீயே மால்வரை நீயே மறிகடல் நீயே இன்பமும் நீயே துன்பமும் நீயே தாயும் நீயே தந்தையும் நீயே விண்முதற்பூதம் ஐந்தவை நீயே புத்தியும் நீயே முத்தியும் நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே.
விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே ஆற்றவும்நீ செய்யும் அருள்.
| [ 1]
|